பிரித்தானியாவில் வசித்துவரும் இளைஞரான புவலோஜன் பொன்ராச குறித்து இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தார் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து குடும்பத்தினரால் நேற்றய தினம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
வவுனியா புந்தோட்டம் ஆறுமுகநாவலர் வீதியை சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பொன்ராசா என்பவருடைய வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு சென்ற குழுவினர் தம்மை இராணுவ புலனாய்வு துறையினர் என அறிமுகம் செய்துள்ளதுடன் லண்டனில் வசிக்கும் அவரது மகனான புவலோஜன் குறித்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
அதாவது லண்டனில் வசிக்கும் அவர்களது மகனான புவலோஜன் அங்கு இலங்கை அரசிற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக, அவற்றை நிறுத்த செல்லுமாறு கூறியும் அவரது விபரங்களை கோரியும் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே கொலை அச்சுறுத்தலுக்குள்ளான குடும்பத்தினர் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரியும் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள கோரியும் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.